தெற்கு உப்பிலியபுரத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு, பயன்பாடின்றி கிடக்கும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு

தெற்கு உப்பிலியபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு பயன்பாடின்றி உள்ளது.

Update: 2020-12-02 00:47 GMT
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரத்தை சுற்றியுள்ள பி.மேட்டூர், கோட்டப்பாளையம், மாராடி, பச்சபெருமாள்பட்டி, எரகுடி, உப்பிலியபுரம், சோபனபுரம், கொப்பம்பட்டி, வைரிசெட்டிப்பாளையம், முருங்கப்பட்டி, நாகநல்லூர், தளுகை உள்ளிட்ட கிராம மக்கள் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இப்பகுதியில் சம்பா நெல் 3,700 எக்டேர் பரப்பளவிலும், சோளம் 1,300 எக்டேர் பரப்பளவிலும், மக்காசோளம் 2,800 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 600 எக்டேர் பரப்பளவிலும், வாழை 100 எக்டேர் பரப்பளவிலும், வெங்காயம் மூன்று பருவங்களாக 750 எக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்படுகிறது.

வெங்காயத்தை பதப்படுத்தும் கிடங்கு

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெற்கு உப்பிலியபுரத்தில் மாராடி சாலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை தொடர் வினியோக மேலாண்மை திட்டத்தின் கீழ் அலுவலகத்துடன் கூடிய முதன்மை பதப்படுத்தும் கட்டிடம் கட்டப்பட்டது. நபார்டு வங்கி உதவியுடன் கிடங்கு உட்கட்டமைப்பு நிதித்திட்டம் 2014-15-ன் மூலம் ரூ.2 கோடியே 89 லட்சம் செலவில் வெங்காயத்தை தரம் பிரிக்கும் எந்திரம், பதப்படுத்தும் கூடம், எடைமேடை ஆகியவற்றுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பயன்பாடின்றி உள்ளது

வெங்காயம் மற்றும் தானிய வகைகள் முருங்கப்பட்டி, நாகநல்லூர் மற்றும் தளுகை பகுதிகளில் தான் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இதனால் வெங்காயத்தை பயிரிடும் அப்பகுதி விவசாயிகள், இந்த பதப்படுத்தும் கூடம் தூரமாக இருப்பதால், கால விரயத்தையும், போக்குவரத்து செலவீனங்களையும் கணக்கிட்டு இங்கு வருவதில்லை. இதன்காரணமாக, மிகவும் விசாலமான, எடை மேடையுடன் கூடிய இந்த பதப்படுத்தும் கூடம் பயன்பாடின்றி உள்ளது. அதே நேரம் இந்த பகுதியில் சம்பா மற்றும் குறுவை நெல் வகைகளே அதிக அளவில் மகசூல் ஆகிறது.

நெல் கொள்முதல் மையங்களில் ஏற்பட்டுள்ள இன்னல்கள், இருப்பு வைப்பதில் இட வசதியின்மை, மழை காலங்களில் நெல் தானியங்கள் நனைந்து முளை விடுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளை இப்பகுதி விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். எனவே இந்த வளாகத்தில் மாற்று தானியங்களின் பயன் பாட்டிற்கோ, மாற்று உபயோகத்திற்கோ சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்