செஞ்சி அருகே விஷம் குடித்து பெண் சாவு துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை

செஞ்சி அருகே விஷம் குடித்து பெண் இறந்தார். துக்கம் தாங்க முடியாமல் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-02 03:24 GMT
செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 65). விவசாயி. இவரது மனைவி குணசாலி(59).

கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் குணசாலி அவதி அடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வயலுக்கு சென்ற குணசாலி, பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, முத்துகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குணசாலி பரிதாபமாக இறந்தார்.

கணவரும் தற்கொலை

இதனால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன், யாரிடமும் பேசாமல் இருந்தார். இதற்கிடையில் நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து இருவரது உடல்களும் செஞ்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து முத்துகிருஷ்ணனின் மகன் சீனிவாசன் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மேலும் செய்திகள்