“திருநங்கைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்” அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளின் அடிப்படை தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

Update: 2020-12-02 04:09 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளின் அடிப்படை தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அனைவரும் சமூக நலத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்து, அரசின் சலுகைகளை பெற வேண்டும். மேலும் அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

இதுவரை 152 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தகுதியான திருநங்கைகள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து, புதிய குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து பரிசீலனை செய்து, அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மேலும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அளித்திடும் பொருட்டு, அவர்களது விவரங்களை கணக்கெடுத்து 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அவரவர் வாழும் இடத்திற்கு அருகாமையிலேயே இருப்பிட வசதி அமைத்து தரவும், பட்டா பெற்றுத்தரவும் சம்பந்தப்பட்ட தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் சுமதி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், கடலூர் தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்