நாட்டறம்பள்ளி அருகே மனைவி, 2 குழந்தைகளை எரித்துக்கொல்ல முயற்சி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

நாட்டறம்பள்ளி அருகே மனைவி, 2 குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு, விவசாயி தற்கொலைக்கு முயன்றார். அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-12-10 10:44 GMT
நாட்டறம்பள்ளி, 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 30), விவசாயி. இவருக்கு சக்திபிரியா (27) என்ற மனைவியும், பிரதீப் (11) என்ற மகனும், பிரித்திகா (9) என்ற மகளும் உள்ளனர். சசிகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சோமநாயக்கன்பட்டிக்கு திரும்பினார்.

சசிகுமாருக்கும், அவருடைய மனைவி சக்திபிரியாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சக்திபிரியா தனது குழந்தைகளுடன் தூங்கச் சென்றுவிட்டார்.

ஆத்திரம் அடங்காத சசிகுமார், மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தூங்கிக் கொண்டிருந்த மனைவி சக்திபிரியா, குழந்தைகள் பிரதீப், பிரித்திகா ஆகியோர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். பின்னர் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீ பிடித்ததும் அவர்கள் அலறி துடித்துள்ளனர். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் சென்று அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்