மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் புராதன சின்னத்தை கடல்நீர் சூழ்ந்தது

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு புராதன சின்னத்தை கடல்நீர் சூழ்ந்தது.

Update: 2020-12-21 01:06 GMT
மாமல்லபுரம், 

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக மாமல்லபுரம் திகழ்கிறது.. இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில் பொழுதை போக்குவர்.

கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு. மாமல்லபுரத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கு எழும்பின. கடல் நீர் 100 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்தது.

குறிப்பாக கரைப்பகுதியில் உள்ள மகிஷாசூரமர்த்தினி குடைவரை சிற்பத்தில் கடல்நீர் புகுந்து ஆக்கிரமித்து கொண்டது. இதுநாள் வரை அந்த பகுதி மணல் பரப்பாக இருந்தது. அதனை சுற்றி வந்து பார்க்கலாம். தற்போது கடல் நீர் அந்த புராதன சின்னத்தை சூழ்ந்து காணப்படுகிறது.

அதனால் முன் பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடல் முன்னோக்கி வந்துவிட்டதால் கரைப்பகுதியில் வலைகள், படகுகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை வைக்க முடியாமல் மீனவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்