மரங்களில் ஆணி அடித்தால் வழக்கு போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை

மரங்களில் ஆணி அடித்தால் வழக்கு போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை.

Update: 2020-12-21 03:17 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து கடந்த 2 ஆண்டுகளாக பனை விதைகள் நடும் பணி மற்றும் ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா தேனி அருகே கொடுவிலார்பட்டியில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கான மேடை பனை ஓலைகளால் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு உத்தமபாளையத்தை சேர்ந்த தொழில் அதிபர் நைனார்முகமது தலைமை தாங்கினார். கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த காளிதாசன் கலந்து கொண்டு சூழலியலும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எதை செய்தாலும் குற்றம் தான். அந்த வகையில் ஆணி அடித்து மரங்களை சேதப்படுத்துவதும் குற்றம் தான். எனவே தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் யாராவது ஆணி அடித்து மரங்களை சேதப்படுத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டில் அஜர்படுத்தி போலீசார் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். மரங்களில் ஆணி அடித்தால் தன்னார்வலர்களோ, தன்னார்வ அமைப்பினரோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார். விழாவில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜ், சின்னக்கண்ணு, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்