தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்

தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.

Update: 2020-12-30 01:20 GMT
புதுச்சேரி,

புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் 3:1 என்கிற விகிதாச்சார அடிப்படையில் வழங்கவேண்டும், பேராயர் பணியிடத்தில் இந்த முறை மக்கள் விகிதாச்சார அடிப்படையிலும், சுழற்சி அடிப்படையிலும் கண்டிப்பாக தலித் பேராயரை மட்டுமே நியமிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக புதுவையில் உள்ள பேராயர் இல்லம் நோக்கி நேற்று தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள். கம்பன் கலையரங்கம் அருகே ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்துக்கு மாநில உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சலேத்தையன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் மாநில இணை பொதுச்செயலாளர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தடுத்து நிறுத்தம்

இசை வாத்தியங்கள் முழங்க அண்ணாசாலை, நேரு வீதி, மி‌‌ஷன் வீதி வழியாக அவர்கள் வந்தனர். வ.உ.சி. பள்ளி அருகே வந்தபோது அதற்கு மேல் செல்ல விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அங்கேயே கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் பேராயர் இல்லத்துக்கு சென்று கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்