சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-01-04 01:38 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (வயது28), தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் வகாப் (49) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.32 லட்சம் தங்கம்

அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்