சென்னை விமான நிலையத்தில் அபுதாபி செல்ல இருந்த விமானத்தில் திடீர் கோளாறு 46 பேர் உயிர் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்ல இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டதால் 46 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2021-01-04 02:12 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு சிறப்பு விமானம் புறப்பட தயாரானது. 38 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 46 பேர் விமானத்தில் இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது.

அப்போது விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதே நிலையில் விமானத்தை வானில் பறக்க வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் விமானம் இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் இருந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே இழுத்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி எந்திரக்கோளாறை சரிசெய்ய முயன்றனர். ஆனால் உடனடியாக முடியவில்லை.

46 பேர் உயிர் தப்பினர்

இதையடுத்து விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னை நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து துரித நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 46 பேர் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்