குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவில் எளிமையாக நடந்த ஹெத்தையம்மன் பண்டிகை
குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவில் ஹெத்தையம்மன் பண்டிகை எளிமையாக நடந்தது.
ஹெத்தையம்மன் பண்டிகை
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமை யிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தை யம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையையொட்டி 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.மேலும் பூக்குண்டம் இறங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
எளிமையாக நடந்தது
இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் ஜெகதளாவில் ஹெத்தையம்மன் பண்டிகை எளிமையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றுகாலை மடியரையில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆடல் பாடல், ஊர்வலம், போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.