20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.

Update: 2021-01-07 03:35 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாநில சட்டப்பிரிவு செயலாளர் சுப்பிரமணியன், மாநில தீர்ப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டசெயலாளர் கிட்டு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது பங்கேற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும்.

ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்க வேண்டும். வயது உச்சவரம்பின்றி ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெறுதல் வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருந்து கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். புதிய கல்வி திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் செந்தில்குமார், குமார், துணை செயலாளர்கள் சத்தியசீலன், சங்கர், சங்க நிர்வாகிகள் வரலட்சுமி, செந்தில், முருகையன், மரகதமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்