ஆக்கிரமிப்பு அகற்றியபோது பெண் தீக்குளிக்க முயற்சி - திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-09 13:44 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி ஆக்கிரமித்திருந்தனர். இந்த நிலையில் தில்லை நடராஜன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிப்போனது.

இந்த நிலையில் நேற்று போலீஸ் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தனது வீடு இடிக்கப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் பாண்டியம்மாள் (வயது 48) என்ற பெண் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து 2 கடைகள் மற்றும் ஒரு வீடு இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்