தொப்பூர் கணவாயில் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது - புகை வெளியேறியதால் பரபரப்பு

தொப்பூர் கணவாயில் லாரி மோதிய விபத்தில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் இருந்து புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-10 10:06 GMT
நல்லம்பள்ளி,

மும்பையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி சென்றது. இந்த லாரியை மராட்டிய மாநிலம் பார்த்தர் பகுதியைச் சேர்ந்த அப்ராஅகமது (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் பகுதியில் வந்த போது கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்கு துணி பாரம் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி, முன்னால் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் சிலிண்டரில் இருந்து புகை வெளியேறியதால் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்