அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்தில் காங்கிரசுக்கு தெளிவான, நிரந்தர நிலைப்பாடு உள்ளது: பாலசாகேப் தோரட்

அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்தில் காங்கிரசுக்கு தெளிவான, நிரந்தர நிலைப்பாடு உள்ளது என கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கூறியுள்ளார்.

Update: 2021-01-11 00:04 GMT
பாலசாகேப் தோரட்
கூட்டணியில் சலசலப்பு
அவுரங்காபாத் மாவட்டத்திற்கு சம்பாஜிநகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று சிவசேனா கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.

மேலும் 1995-ம் அண்டு அவுரங்காபாத் மாநகராட்சியில் இது தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரித்து காங்கிரஸ் கட்சி கோர்ட்டை நாடியது. இதனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால் தற்போது கொள்கை முரண்பாடு கொண்ட இரு கட்சிகள் கூட்டணியாக மராட்டியத்தில் ஆட்சி புரிந்து வருகின்றன. இந்தநிலையில் அவுரங்காபாத்தின் பெயர் விரைவில் மாற்றப்படும் என சிவசேனா சமீபத்தில் அறிவித்தது.

வலுவாக எதிர்க்கும்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி “அவுரங்காபாத்திற்கு சாம்பாஜி என்று பெயர் மாற்றுவது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்க்கும்” என தெரிவித்தது.

இந்த விவகாரம் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கி இருக்கும் நிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவுரங்காபாத்தை, சம்பாஜி நகர் என பகிரங்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அழைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கூறியதாவது:-

பிளவுகளை தவிர்க்க...
அவுரங்காபாத் பெயர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரமான மற்றும் தெளிவான நிலைப்பாடு உள்ளது. நான் தற்போதும் அதே நிலைப்பாட்டை தான் முன்வைத்து வருகிறேன். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் முறையாக விளக்குவோம் என்று நம்புகிறேன். அவுரங்காபாத் பெயர் விவகாரத்தில் அரசியல் விளையாடுவதால் பிளவு ஏற்படுகிறது.

பிளவுகளை தவிர்ப்பதற்காகவே இதுபோன்ற பெயர்மாற்றம் செய்யும் திட்டங்களை காங்கிரஸ் எப்போதும் எதிர்க்கிறது.

மகாவிகாஸ் கூட்டணி அரசு ஒரு பொது குறைந்த செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வாறே செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்