கோப்புகளுக்கு அனுமதி வழங்கக்கோரி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், அவரை திரும்பப்பெற வலியுறுத்தியும் அண்ணா சிலை அருகே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடந்தது.
இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி, போராட்டம் முடிந்தவுடன் சட்டசபைக்கு சென்று அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எனது துறைகள் சார்பாக 15 கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி கவர்னருக்கு கோப்பு அனுப்பி உள்ளேன். அந்த கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி வழங்கும் வரை நான் சட்டசபையில் போராட்டத்தை தொடருவேன்’ என்றார்.
அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேற்று இரவு சட்டசபை வளாகத்திலேயே
படுத்து தூங்கினர்.