பொங்கல் பண்டிைகயை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கரும்பு ஏற்றுமதி; விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பலில் கரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-01-11 03:53 GMT
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக கரும்புகள் அறுவடை நடந்தபோது எடுத்த படம்
கரும்பு பயிர்
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுமார் 28 எக்டேரில் கரும்பு பயிரிடப்படுகிறது. பாபநாசம் பொதிகையடி, டாணா,அனவன்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் கரும்பு பயிரிடுகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பயிரிடப்படும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.

இந்த ஆண்டுக்கான கரும்பு அறுவடை இப்பகுதியில் தொடங்கி உள்ளது. முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இப்பகுதி கரும்புகள் சிங்கப்பூருக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதி
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘ஆண்டுதோறும் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் சித்திரையில் கரும்பு பயிரிடுகிறோம். மார்கழி கடைசியில் கரும்பு அறுவடை செய்கிறோம். இங்கு விளையும் கரும்பு பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கப்பலில் சென்னை வழியாக கரும்புகள் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்றனர்.

இந்த ஆண்டு இப்பகுதி கரும்புகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பது, இப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்