பில்லூர்- திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி

பில்லூர்- திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2021-01-14 05:55 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் பில்லூர்- திருப்பாச்சனூர் இடையே ஓடும் நரியாற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் தரைப்பாலம் அமைத்தல், ரூ.41 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் வெள்ள பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் ரூ.7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சாலை அமைத்தல் என ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்கான பூமி பூஜை விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் லட்சுமிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயா சுரேஷ்பாபு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய பாசறை பொருளாளர் முரளி, இலக்கிய அணி துணை செயலாளர் கார்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் கனகராஜ், மாணவர் அணி இணை செயலாளர் ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர்கள் நாராயணன், ஆதிமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்டமானடி ராஜி, ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர்ராஜ், கிளை செயலாளர்கள் கருணாமூர்த்தி, கணேசன், குணசேகர், இளையபெருமாள், வாசுதேவன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏரிகளை சீரமைக்கும் பணி

முன்னதாக விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் பிரதான் மந்திரி கணிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வி.மருதூர் ஏரியை ரூ.10 லட்சம் மதிப்பிலும், சாலாமேடு பொன்னேரியை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், அய்யனார் ஏரியை ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், பானாம்பட்டு ஏரியை ரூ.8 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 4 ஏரிகளை ரூ. 34 லட்சம் மதிப்பில் சீரமைப்பு செய்யும் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர், நகர அவைத்தலைவர் பால்ராஜ், நகர மாணவர் அணி செயலாளர் அன்பு, நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்