திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொன்று உடலை வீட்டில் புதைத்தவர் கைது

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்து உடலை வீட்டின் குளியல் அறையில் புதைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-17 01:58 GMT
மும்பை, 

பால்கர் மாவட்டம் பொய்சர் பகுதியை சோ்ந்தவர் அமிதா (வயது 32) . இவரை கடந்த சில மாதங்களாக காணவில்லை என கூறப்பட்டது. இதுகுறித்து அமிதாவின் சகோதரர் பொய்சர் எம்.ஐ.டி.சி. போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அமிதாவின் காதலன் காா் டிரைவர் சுரஜ் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது.

பொய்சரில் உள்ள நிறுவனத்தில் அமிதாவும், சுரஜூம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்து உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதில் அமிதா திருமணம் செய்து கொள்ளுமாறு சுரஜை வற்புறுத்தி வந்து உள்ளார். எனவே அவர் அமிதாவை கொலை செய்ய திட்டம்போட்டார்.

இதற்காக அவர் வன்காவ் விருந்தாவன் கட்டிடத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார். பின்னர் அவர் அமிதாவை அந்த வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார். பின்னர் அவர் அந்த வீட்டில் குளியல்அறை அலமாரியில் பெண்ணின் உடலை வைத்து புதைத்து வெளியில் சிமெண்ட் போட்டு பூசினார். இதனால் உடல் அழுகி துர்நாற்றம் வெளியே வராமல் இருந்து உள்ளது.

மேலும் அவர் காதலி உயிரோடு இருப்பது போல சித்தரிக்க பெண்ணின் செல்போனில் இருந்து அவரது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் மூலம் அடிக்கடி குறுந்தகவல் அனுப்பி வந்து உள்ளார். இந்த தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரின் பெண்ணின் அழுகிய உடலை வீட்டின் குளியல் அறையில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுரஜை கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்