ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணிநடந்தது.

Update: 2021-01-21 23:34 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், அரசு போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் (பயிற்சி மற்றும் பாதுகாப்பு) சாய்கிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீபிரியா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார ராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்கள் பங்கேற்பு

இதில் பெண் போலீசார், அரசு அலுவலகங்கள், வாகன ஷோரூம்களில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெற வந்த பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியாக சென்றனர். இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு முடிவடைந்தது. பேரணியின்போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

மேலும் செய்திகள்