பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்

கொடுங்கையூரில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலிபரின் காதல் தொல்லை காரணமாக தங்கள் மகள் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

Update: 2021-01-26 02:29 GMT
பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் யுனைடெட் கார்ப்பரேட் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி லில்லி. இவர்களுடைய மகள் ஜெயஸ்ரீ (வயது21). இவர், கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் ஜெயஸ்ரீ, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாய் லில்லி, வீட்டுக்கு வந்தபோது தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், தூக்கில் தொங்கியஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோர், போலீசில் அளித்துள்ள புகாரில், தங்கள் மகளுக்கு வாலிபர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனாலேயே ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி இருந்தனர்.

அதன்பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்