குடித்துவிட்டு தகராறு: கூலி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை

குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட கூலி தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-28 15:06 GMT
கொலையான பழனிராஜா கைதான கனகரத்தினம்
வால்பாறை

குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட கூலி தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.  

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கூலி தொழிலாளி 

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் கனகரத்தினம் (வயது 45), கூலி
தொழிலாளி.  இவருடைய மனைவி அனுசுயா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசுயாவும் கூலி வேலை செய்து வருகிறார். 

அனுசுயாவின் தம்பி பழனிராஜா (31) கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்காள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் அங்கேயே தங்கி இருந்து அந்தப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். 

குடித்துவிட்டு தகராறு 

குடிபழக்கத்துக்கு அடிமையான கனகரத்தினம் தினமும் குடித்துவிட்டு அனுசுயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வந்த கனகரத்தினம், அனுசுயாவிடம் தகராறு செய்தார்.

அப்போது வீட்டில் இருந்த பழனிராஜா, ஏன் மாமா, இப்படி தினமும் குடித்துவிட்டு வந்து அக்காளிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டு உள்ளார். அதற்கு அவர் நான் அப்படிதான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 

கத்தியால் சரமாரியாக குத்தினார் 

பிறகு பழனிராஜா, தனது அறைக்கு சென்று படுத்துவிட்டார். அப்போது கழிவறைக்கு சென்று திரும்பிய கனகரத்தினம், கத்தியை எடுத்துக்கொண்டு பழனிராஜா அறைக்கு சென்றார். அங்கு கட்டிலில் படுத்து கிடந்த பழனிராஜாவை, அவர் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.  

இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அனுசுயா மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து கனகரத்தினம் வெளியே தப்பி ஓடினார். 

பரிதாப சாவு 

பின்னர் அவர்கள் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பழனிராஜாவை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கனகரத்தினத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் பஸ்நிலையத்தில் மறைந்து இருந்த அவரை போலீசார்  கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

குடிபோதையில் அக்காளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்