ஆக்கிரமிப்பை அகற்றகோரி ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சித்தரேவு ஊராட்சி சங்காரெட்டிகோட்டை வடக்குத்தெருவில் உள்ள அங்கன்வாடி அருகே மர்ம நபர்கள் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக கூறப்படுகிறது.

Update: 2021-02-04 23:54 GMT
இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த சங்காரெட்டிகோட்டை கிராம மக்கள் பாய், படுக்கை, சமையல் உபகரணங்களுடன் வந்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 
ஆனால் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டதால் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் அங்கு காத்திருந்த கிராம மக்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்