வீட்டின் மாடிக்கு செல்போனில் பேசியபடி சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

குன்றத்தூர் அருகே வீட்டின் மாடிக்கு செல்போனில் பேசியபடி சென்ற வாலிபரின் கை மின்வயரில் பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-07 04:50 GMT
பூந்தமல்லி, 

திருவேற்காடு கோலடியை சேர்ந்தவர் ஆஷிக் (வயது 28), வீடுகளுக்குள் பால்சீலிங் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். குன்றத்தூர், தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள பொன்னம்மாள் என்பவரது வீட்டில் டிசைனிங் வேலை செய்வதற்காக நேற்று சென்றவர் செல்போனில் பேசியபடி வீட்டின் மாடிக்கு சென்றார்.

அப்போது மாடியை ஒட்டி மின்சார வயர் சென்று கொண்டிருந்தது. செல்போனில் பேசிக்கொண்டிருந்த படியே எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயரின் மீது அவரது கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

சாவு

இதில் மயங்கிய ஆஷிக்கை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து போன ஆஷிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செல்போனில் பேசியபடி நடந்து சென்றவர் எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் கை பட்டு மின்சாரம் தாக்கி இறந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்