சேலத்தில் தையல் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு

சேலத்தில் தையல் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-02-08 01:05 GMT
தையல் தொழிலாளி
சேலம் கோரிமேடு அருகே உள்ள ஜல்லிக்காடு பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் சிவா (வயது 62). நேற்று மதியம் இவருடைய கடைக்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இதில் ஒருவர் மங்கி குல்லா அணிந்திருந்தார். பின்னர் அவர்கள் கடைக்குள் சென்று சிவாவிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.

இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்குப்பதிவு
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தையல் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்