அந்தியூர் அருகே பயிருக்கு பூச்சிமருந்து தெளித்த விவசாயி மர்ம சாவு- போலீஸ் தீவிர விசாரணை

பயிருக்கு பூச்சிமருந்து தெளித்த விவசாயி மர்ம சாவு

Update: 2021-02-15 22:11 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே பயிருக்கு பூச்சிமருந்து தெளித்த விவசாயி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
விவசாயி
அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 35). விவசாயி. கூலி வேலைக்கும் சென்று வந்தார். இவருடைய மனைவி மைதிலி. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி நந்தகுமார் தன்னுடைய தோட்டத்தில் நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளித்தார். அதன்பின்னர் வீட்டுக்கு சென்ற நந்தகுமார் உணவு சாப்பிட்டார். அப்போது சாப்பாடு கசந்தது. அதனால் உணவு அருந்தாமல், மதிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
கசப்பு உணர்வு
பின்னர் அன்று மதியம் உணவு சாப்பிட்டார். அப்போதும் அவருக்கு நாவில் கசப்பு உணர்வு ஏற்பட்டது. அதனால் அந்த உணவை சாப்பிடாமல் கீழே கொட்டிவிட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.  இந்தநிலையில் கடந்த 31-ந் தேதி அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நந்தகுமார் நேற்று காலை இறந்துவிட்டார்.
கர்ப்பிணி
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து நந்தகுமார் மர்மமான முறையில் இறந்திருப்பதால், அவர் எப்படி இறந்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். 
நந்தகுமாரின் மனைவி மைதிலி, கணவரின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது. அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்