மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2021-02-21 18:47 GMT
பொன்னமராவதி, பிப்.22-
பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
விருந்துக்கு...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பாண்டிமான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 30). இவரும் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பாண்டியராஜன் மகன் ரத்தினவேல் (27) என்பவரும் நண்பர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் பொன்னமராவதி அருகே ஆலவயல் பொருவாய்பாலக்குறிச்சியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரத்தினவேல் ஓட்டி வந்தார்.
ஆலவயல் வேட்டைக்காரன் கோவில் அருகே வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சாவு
இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து பொன்னமரவாதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்  மாயழகு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆனந்தகுமார் ராஜஸ்தானில் ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, இந்த விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்