2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-23 17:07 GMT
தேனி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதியக்குழுவில் சேர்த்து அரசு ஊழியர்களாக மாற்றுவேன் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. 

அதன்படி 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

நுழைவு வாயிலை கடந்து, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றனர். அங்குள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களில் பலரும் கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். 

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகலட்சுமி தலைமை தாங்கினார்.
இதில், மாவட்ட தலைவர் சாந்தியம்மாள், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். 

கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மதிய உணவை, போராட்டம் நடத்திய இடத்திலேயே சாப்பிட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இரவு வரை இந்த போராட்டம் நீடித்தது. போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்