மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-23 18:58 GMT
கறம்பக்குடி, பிப்.24-
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். அப்போது, அங்கு நின்ற போலீசார்,அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அங்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்