‘வனத்துறையில் சாதிக்க முடியாததால் சாகிறேன்’ தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ வெளியிட்ட சென்னம்பட்டி வனக்காப்பாளர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு

‘வனத்துறையில் சாதிக்க முடியாததால் சாகிறேன்’ என தற்கொலை செய்வதற்கு முன் வனக்காப்பாளர் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-02-23 21:42 GMT
‘வனத்துறையில் சாதிக்க முடியாததால் சாகிறேன்’ என தற்கொலை செய்வதற்கு முன் வனக்காப்பாளர் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வனக்காப்பாளர்
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். 
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள கொம்புதூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
வைரலாகும் வீடியோ
இதற்கிடையே பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
அந்த வீடியோவில், ‘வனத்துறையில் நேர்மையாக வேலை செய்பவர்களை யாரும் மதிப்பதில்லை. இங்குள்ளவர்களுக்கு காசுதான். ஓடி ஓடி உண்மையாக உழைத்தால் கூட ஒண்ணும் செய்ய முடியாது. இங்கு ஜால்ரா போடுபவர்களுக்குத்தான் நல்ல வாழ்க்கை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வனச்சரகத்தில் வேலை பார்க்கும் வனக்காப்பாளர்களை கண்டுெகாள்வதில்லை. புதிதாக வருபவர்களை அடிக்கடி மாற்றுகிறார்கள். 
காசுக்கு அடிமை
நான் எம்.பி.ஏ. ஆஸ்பத்திரி மேனேஜ்மெண்ட் படித்து உள்ளேன். வனத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை. வனச்சரகரை கேட்டு கேட்டு செய்ய வேண்டியது உள்ளது. என்னை மாவட்ட வன அதிகாரி மிகவும் கேவலமாக பார்க்கிறார். வனத்துறை காசுக்கு அடிமையாகிவிட்டது,’. இவ்வாறு அந்த வீடியோவில் பிரபாகரன் பேசி உள்ளார். 
பிரபாகரனின் தந்தை இறந்துவிட்டார். இதனால் ராஜம்மாள் தனது ஒரே மகனான பிரபாகரனுடன் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில் மகனும் இறந்துவிட்டதால் ராஜம்மாள் எந்தவித ஆதரவும் இன்றி உள்ளார். எனவே ராஜம்மாளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பல்வேறு சமூக அமைப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்