ஈரோட்டில் ஸ்கூட்டர்- மொபட் மோதி பெண் சாவு மகன் கண் முன் நேர்ந்த பரிதாபம்

ஈரோட்டில் ஸ்கூட்டர்- மொபட் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் மகன் கண்முன்னே இறந்தார்.

Update: 2021-02-23 22:01 GMT
ஈரோட்டில் ஸ்கூட்டர்- மொபட் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் மகன் கண்முன்னே இறந்தார்.
மொபட்டில்...
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி சாந்தி (வயது 54). இவர்களது மகன் தினேஷ் சக்கரவர்த்தி (19). நேற்று அதிகாலையில் சாந்தியும், தினேஷ் சக்கரவர்த்தியும் மொபட்டில் ஈரோடு நசியனூர்ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தினேஷ் சக்கரவர்த்தி மொபட்டை ஓட்டிச்சென்றார். அவர்கள் வெட்டுக்காட்டு வலசு பகுதியில் சென்றபோது, எதிரில் வெட்டுக்காட்டுவலசை சேர்ந்த சீனிவாசனின் மகன் விஷ்ணுவர்தன் (20) ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் மொபட்டும், ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. 
இறந்தார்
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சாந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார். மேலும், தினேஷ் சக்கரவர்த்தியும், விஷ்ணுவர்தனும் காயம் அடைந்தார்கள். இதுபற்றிஅறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மகன் கண் முன்னே தாய் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்