லாரி மோதி கல்லூரி மாணவி பலி - தோழி படுகாயம்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். அவரது தோழி படுகாயம் அடைந்தார்.

Update: 2021-02-25 06:08 GMT
செங்குன்றம், 

சென்னை பெரம்பூர் ஆதிகேசவ நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகள் மதுமிதா (வயது 20). இவர், செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதே கல்லூரியில் படிக்கும் அவருடைய தோழி அர்ச்சனா என்பவருடன் நேற்று காலை மதுமிதா, இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். கிரான்ட்லைன் அருகே செங்குன்றம்-மாதவரம் நெடுஞ்சாலையில் இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது செங்குன்றத்தில் இருந்து மாதவரம் நோக்கி எதிரே வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மதுமிதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அவருடைய தோழி அர்ச்சனா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்