திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

Update: 2021-02-25 13:07 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன் சந்திரசேகரர்-திருப்புரசுந்தரி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதைதொடர்ந்து காலை 10.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. “தியாகராயா ஆரோரா... ஒற்றியூரா நமச்சிவாய...” என பக்தி கோஷங்கள் முழங்க, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கே.கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட 42 அடி உயரம் கொண்ட தேர், 108 கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரதநாட்டியம், 108 சங்க நாதம் முழங்க திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பிரமாண்ட மெட்ரோ ரெயில் தூண்கள் நடுவே 4 மாட வீதிகளை சுற்றி வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டது. பல வீடுகளில் குடும்பமாக வந்து தேருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மாசி திருவிழாவின் 9-ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதைதொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்