பஸ்கள் மோதியதில் மாணவிகள் உள்பட 6 பேர் காயம்

வேடசந்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மினி பஸ்சின் பின்பகுதியில் மோதியதில் மாணவிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-02-25 17:08 GMT
வேடசந்தூர்:

வேடசந்தூருக்கு மன்னார்கோட்டையில் இருந்து தனியார் மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. 

பஸ்சை கெண்டையகவுண்டனூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 39) என்பவர் ஓட்டினார். அந்த மினி பஸ் வேடசந்தூர் பஸ் நிலையம் நோக்கி வந்தது. 

அப்போது வேடசந்தூர்- வடமதுரை சாலையில் தனியார் திருமண மண்டபம் முன்பு கார் ஒன்று குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மினி பஸ்சின் டிரைவர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது பின்னால் மாத்தினிபட்டியில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ், மினி பஸ்சின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் மினி பஸ்சில் இருந்த பள்ளி மாணவிகள் நாகராணி (17), புவனேஸ்வரி (16), சத்தியபாமா (17), சாரதா (15) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். 

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்