திருப்புவனம்,
திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேஸ்வரர், சவுந்தரநாயகி அம்மன் கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ஆளுகைக்கு உட்பட்டது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய புலவர்களால் பாடல் பெற்ற தலமாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பு. கோவிலில் ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் கொடிமரம் அருகே உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி-அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சியளித்தனர். சுவாமி- அம்பாளுக்கு தீபாராதனை செய்து பின்னர் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.