தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-26 18:08 GMT
தர்மபுரி:
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் ரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் டியூக் பொன்ராஜ், கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவசங்கரன், வெங்கடேஸ்வரன், சரவணன், தாமோதரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பதவி உயர்வு
இந்த போராட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 30 சதவீதமாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது கடைசியாக பெறுகின்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக அளிக்க வேண்டும்.
கிராம உதவியாளர் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும். கிராம உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு பெறும் போது 50 சதவீத பணி மூப்பை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்