போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு

ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி பெரம்பலூரில் 2-வது நாளாக நீடித்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2021-02-26 19:32 GMT
பெரம்பலூர்:

30 சதவீதத்திற்கு மேல் பஸ்கள் ஓடின
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தக்கோரியும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க மறுப்பதை கண்டித்தும் பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இந்த போராட்டத்தினால் நேற்று முன்தினம் பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து 25 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.
நேற்று 2-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. நேற்று அரசு பஸ்களுக்கு தற்காலிகமாக பணிபுரிய டிரைவர்- கண்டக்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டதால், 30 சதவீதத்திற்கு மேல் பஸ்கள் ஓடின.
ஆர்ப்பாட்டம்
மேலும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்