குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

விழுப்புரம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-02-28 17:18 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள வேலியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 36). ரவுடியான இவர் மீது விழுப்புரம் பகுதிகளில் கொலை, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ராஜீவ்காந்தியை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

அதன்பேரில் ராஜீவ்காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்