ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Update: 2021-02-28 18:55 GMT
பென்னாகரம், 

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கனஅடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி மணல் திட்டு, ஐந்தருவி வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து அவர்கள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் பஸ் நிலையம், நடைபாதை, அஞ்செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. 

இதன்காரணமாக கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ஊட்டமலை, ஆலம்பாடி, மணல் திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்