ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-01 19:39 GMT
பெரம்பலூர்:

மண்எண்ணெயை ஊற்றி...
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஒருவர் திடீரென்று பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார். இதனை கண்ட அங்கிருந்த நிருபர்கள் ஓடிச்சென்று, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டில் மற்றும் தீப்பெட்டியை பறித்து அவரை காப்பாற்றினர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கடன் தொல்லை
விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தூரை சேர்ந்த சாமிநாதன் (வயது 67) என்பதும், திருச்சி பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு செல்வாம்பாள் என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. தற்போது சாமிநாதன் ராமலிங்கபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடன் தொல்லையால் சாமிநாதன் நிலத்தினை விற்பனை செய்வதற்கு, நிலத்தை பாகப்பிரிவினை செய்து தருமாறு தனது அண்ணன்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்க முன்வரவில்லை. மேலும் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து சாமிநாதனையும், அவரது மனைவியையும் அடித்தும், தகாத வார்த்தையால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
பரபரப்பு
இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை பாகப்பிரிவினை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாமிநாதன் போலீசாரிடமும், கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த சாமிநாதன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்