சிதம்பரம் பகுதியில் மணல், ஜல்லிகள் கடத்தல் 57 லாரிகள் பறிமுதல் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அதிரடி நடவடிக்கை

மணல், ஜல்லிகள் கடத்தல் 57 லாரிகள் பறிமுதல்

Update: 2021-03-02 15:39 GMT
சிதம்பரம், 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அதிகாரிகள் இன்று அதிகாலை சிதம்பரம் புறவழிச்சாலை மற்றும் ஆலப்பாக்கம், புதுச்சத்திரம் கடலூர்-சிதம்பரம் சாலையில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக  மணல், ஜல்லிகள், எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தடுத்து நிறுத்தி, டிரைவர்களிடம் உரிய ஆவணங்களுடன் மணல், ஜல்லிகள், எம்.சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறதா? என விசாரணை நடத்தினார். விசாரணையில் 57 லாரிகளில்  மணல், ஜல்லிகள், எம்.சாண்ட் கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட லாரிகளில் பெரும்பாலானவை  அதிகபாரம் ஏற்றிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் பகுதிகளில் இருந்து நாகை மாவட்டம் சீர்காழி நோக்கி சென்றபோது சிக்கியதும் தெரிந்தது.
இதையடுத்து மணல், ஜல்லிகள்  கடத்த பயன்படுத்தப்பட்ட லாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்த கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தோடு, சம்பந்தப்பட்ட லாரிகளை ஓட்டிவந்தவர்கள் மீது வழக்குப்பதிந்து, அபராதம் வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
அப்போது சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், தாலுகா இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கலெக்டரின் அதிரடி வாகன சோதனையால் சிதம்பரம் பகுதியில் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்