வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-03-02 22:33 GMT
ஈரோடு
வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
புகார் மனு
ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த மணிவேலின் மகன் நவீன்குமார் (வயது 25) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருப்பதாவது:-
நான் 2 கார்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறேன். ஈரோட்டை சேர்ந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பிரபல கட்டுமான நிறுவனத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருவதாக கூறிய அவர், அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்களை இயக்குவதற்காக அணுகினார். அவரை நம்பிய நான் 2 கார்களை வாடகைக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கினேன். முதல் 2 மாத வாடகை தொகையாக ரூ.72 ஆயிரத்து 500, அதையடுத்து ரூ.1 லட்சம் கொடுத்தார்.
மோசடி
அவர் பணிபுரிவதாக கூறிய நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக வேலை பார்ப்பதற்கு ஆள் எடுப்பதாகவும், அந்த வேலையில் சேர்வதற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதனால் எனக்கு தெரிந்த 28 பேரை வேலைக்கு சேர்த்து விடுவதற்காக பணத்தை கொடுத்தேன். அதில் சிலருக்கு மட்டுமே ஒருமாத சம்பளம் வழங்கப்பட்டது. இதேபோல் அவர் பலரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டார். எனது கார் வாடகையையும் அவர் கொடுக்கவில்லை. கார்களை திரும்ப கேட்டும் ஒப்படைக்க மறுக்கிறார். எனவே மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

மேலும் செய்திகள்