நாமக்கல் அருகே பரிதாபம் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட 3 பேர் பலி

நாமக்கல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2021-03-04 22:44 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பொரசபாளையம் கணக்கன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60). விவசாயி. இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய மண் வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டின் அருகே புதிய வீடு கட்டிய அவர் குடும்பத்துடன் அதில் குடியேறினார். பழைய வீட்டில் விவசாய உபகரணங்களை வைத்திருந்தார்.
இந்த நிலையில், அந்த வீடு மிகவும் பழமையானதால் அதை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதையொட்டி நேற்று வீட்டு சுவரில் இருந்த கற்களை பெயர்த்து எடுக்கும் பணியில் சின்னதம்பி ஈடுபட்டார். இதை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி பூங்கொடி (55), தனது பேத்தி தேவஸ்ரீ(2) உடன் அங்குள்ள தடுப்பு சுவர் ஒன்றின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

குழந்தை உள்பட 3 பேர் பலி

அப்போது திடீரென அந்த வீட்டின் பின்புற மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பூங்கொடி, அவரது பேத்தி தேவஸ்ரீ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த சின்னதம்பியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சின்னதம்பி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நல்லிபாளையம் போலீசார் பூங்கொடி மற்றும் தேவஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாசில்தார் விசாரணை

இதற்கிடையே தாசில்தார் தமிழ்மணியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இறந்து போன தேவஸ்ரீ, பூங்கொடியின் மகன் மோகன்குமாரின் மகள் ஆவார். மோகன்குமார் மராட்டிய மாநிலம் புனேவில் மெக்கானிக் பட்டறை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அவரது மனைவி சரண்யா, மகன் தன்வந்த், மகள் தேவஸ்ரீ ஆகியோருடன் தாத்தா, பாட்டி வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் நேற்று அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்