கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

குளச்சல் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

Update: 2021-03-06 13:32 GMT
குளச்சல்:
குளச்சல் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மார்பிள் கடை ஊழியர்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் சுஜின். டிரைவரான இவருடைய மனைவி ஜெசி (வயது 29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சுஜினின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விபின் ராஜ்குமார் (39). சுஜினும், விபின் ராஜ்குமாரும் உறவினர்கள். விபின் ராஜ்குமாருக்கு திருமணமாகி புஷ்பலதா (42) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விபின் ராஜ்குமார் தக்கலையில் உள்ள ஒரு மார்பிள் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விபின் ராஜ்குமாருக்கும், ஜெசிக்கும் கள்ளக்காதல் உருவானது.
இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற விபின் ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி புஷ்பலதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
கள்ளக்காதலியுடன் விஷம் குடித்தார்
இந்தநிலையில் 2-ந் தேதி மாலை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் பின்புறம் விபின் ராஜ்குமார், சுஜின் மனைவி ஜெசியுடன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அந்த பகுதியினர் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஜெசி மறுநாள் இறந்து விட்டார்.
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார் 
கள்ளக்காதலை உறவினர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று விபின்ராஜ்குமாரும், ஜெசியும் மனம் திறந்து பேசியுள்ளனர். பின்னர் உயிரோடு இருந்தால் சேர்ந்து வாழ முடியாது, சாவிலாவது ஒன்று சேர்வோம் என கருதி அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்தது.
இதில் கள்ளக்காதலி இறந்த நிலையில் விபின் ராஜ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் அங்கு மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அவரை உறவினர்களும், போலீசாரும் தேடி வந்தனர். ஆனால் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். 
இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த காதலன், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்