நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பராமரிப்பு பணி

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பராமரிப்பு பணி நடந்தது.

Update: 2021-03-09 20:29 GMT
நெல்லை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பாளையங்கோட்டையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. 

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்று பத்திரமாக வைப்பது குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கலெக்டர் விஷ்ணு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சில பராமரிப்பு பணிகளை செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்பு சுவர் ஏற்படுத்துதல், உடைந்து கிடக்கும் கட்டிடங்களை சரி செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் பொதுப்பணித் துறையின் மூலம் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்