தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே மேட்டுவிளை முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன். கூலி தொழிலாளி. இவரது வீட்டின் முன்பாக லாரி சென்றபோது, வீட்டின் வளாகத்தில் இருந்த முருங்கை மரத்தின் கிளை முறிந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரை அழகேசன் கண்டித்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் லாரி டிரைவருக்கு ஆதரவாக அழகேசனிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமுத்து கம்பால் அழகேசனை தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுடலைமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.