கொங்கு மண்டல மக்களுக்கு துரோகம் இழைத்தவர் முதல்-அமைச்சர் பழனிசாமி; ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொங்கு மண்டல மக்களுக்கு துரோகம் இழைத்தவர் முதல்-அமைச்சர் பழனிசாமி என்று ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Update: 2021-03-26 21:21 GMT
ஈரோடு
கொங்கு மண்டல மக்களுக்கு துரோகம் இழைத்தவர் முதல்-அமைச்சர் பழனிசாமி என்று ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
 ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன் (மொடக்குறிச்சி), சு.முத்துசாமி (ஈரோடு மேற்கு), வெங்கடாசலம் (குமாரபாளையம்), கே.கே.சி.பாலு (பெருந்துறை), திருமகன் ஈவேரா (ஈரோடு கிழக்கு) ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு அருகே சித்தோட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வாக்காளர்களாகிய உங்களை தேடி நாடி நான் வந்திருக்கிறேன். ஈரோட்டுக்கு வந்திருக்கிறேன். பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த ஈரோட்டுக்கு வந்திருக்கிறேன். அறிஞர் அண்ணா பணியாற்றிய ஈரோட்டுக்கு வந்திருக்கிறேன். மறைந்தாலும் நம் உள்ளங்களில் மறையாமல் வாழும் கலைஞரின் குருகுலமான ஈரோட்டுக்கு வந்திருக்கிறேன்.
எழில்மிகு மாநகரின் ஈரோடு கிழக்கு, மேற்கு, பாசன நிலங்கள் அதிகம் நிறைந்த மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளை கொண்டு இருக்கும் ஈரோடு மாவட்டத்துக்கு வந்து இருக்கிறேன்.
பட்டியல் இடலாம்
இதே ஈரோட்டில், நம் தலைவர் கலைஞர் உடல்நலம் நலிவடைந்து இருந்தபோது மண்டல மாநாட்டினை நடத்தி 5 பெரும் முழக்கங்களை வைத்தேன். அந்த மாநாட்டில் தமிழ்நாட்டை மீட்டு கலைஞர் கைகளில் ஒப்படைப்போம் என்று சூளுரைத்தோம். இதோ அதற்கான நேரம் இப்போது வந்து இருக்கிறது.
கலைஞர் 5 முறை ஆட்சியில் இருந்தபோது எல்லாம் கொங்கு வட்டாரத்துக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அவர் ஆற்றிய பணிகளை, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியல் இடலாம்.
நிறைவேற்றியவர் கலைஞர்
1955-ம் ஆண்டு முதல் கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அந்த கோரிக்கையை 16-5-1975 அன்று நிறைவேற்றி உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர், தி.மு.க. ஆட்சியில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக கோவையில் பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய சர்க்கரை மன்றாடியார் கூறும்போது, டாக்டர் சுப்பராயன் செய்ய முடியாததை, சி.சுப்பிரமணியம் செய்ய முடியாததை முதல்-அமைச்சர் கருணாநிதி செய்து இருக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை கொண்டு இருக்கும் கொங்கு வேளாளர்கள் வேலைகள் பெறுவார்கள் என்றார்.
3 சதவீத இடஒதுக்கீடு
அந்த விழாவில் கலைஞர் பேசும்போது, நான் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன். ஆனால் இது உங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. உரிமை என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். உங்கள் உரிமையை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள் என்றார்.  மாநில அரசு பணிக்கு மட்டுமின்றி மண்டல் கமிஷன் மூலம் மத்திய அரசு பணிகளுக்கும் வாசலை திறந்து வைத்தவர் கலைஞர்.
இதுபோல் அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்தவர், 
சட்டம் இயற்றியவர் கலைஞர்,  இந்த சட்டம் சட்டசபையில் இயற்றப்பட வேண்டிய நாளில், முதல்-அமைச்சராக இருந்த கலைஞரால் வர முடியவில்லை.
 முதுகுத்தண்டில் அறுவைசிகிச்சை செய்து ஆஸ்பத்திரியில் இருந்தார். டாக்டர்கள் வற்புறுத்தியதால் அவரால் சட்டசபையில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த என்னை அழைத்து, சட்டமன்றத்தில் அருந்ததியர் இட ஒதுக்கீடு சட்டத்தை முன்மொழிய உததரவிட்டார். அந்த வகையில் அருந்ததியர் 3 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை முன்மொழிந்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையத்தில் கொங்கு வேளாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று குட்டப்பாளையம் சாமிநாதன் கோட்டையில் கலைஞரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதை ஏற்று ஏ.பழனிச்சாமி என்பவரை பதவியில் அமர்த்தினார் கலைஞர்.
சொல்லமுடியுமா?
விவசாயிகளுக்கான தெண்ட வரியை நீக்கியவர் கலைஞர். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், அத்திக்கடவு-அவிநாசி திட்ட பகுதி-1, பகுதி-2, சென்வாட் வரி நீக்கம், ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு, பாதாளசாக்கடை திட்டம், கங்காபுரம் டெக்ஸ்வேலி, கோவை வேளாண் பல்கலைக்கழகம், சிறுவாணி அணைத்திட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, தென்னை நலவாரியம் என்று கொங்கு மண்டலத்துக்கு தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை வரிசைப்படுத்தி என்னால் கூற முடியும். ஆனால், முதல்-அமைச்சர் பழனிசாமியால் இப்படி வரிசையாக சொல்ல முடியுமா?.
மேற்கு மண்டலம் எங்கள் மாவட்டம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கும் அவர்களால் இந்த மண்டலத்துக்கு செய்யப்பட்ட திட்டங்களை பட்டியல் போட முடியுமா?.
துரோகங்கள்
அவர்களால் கொங்கு மண்டல மக்களுக்கு வேதனை, சோதனை, துரோகம்தான். சரக்கு மற்றும் சேவை வரியை ஏற்றுக்கொண்டதால் சிறு-குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. 3 வேளாண்மை சட்டங்களை ஆதரித்து முக்கிய தொழிலான விவசாயத்தை அழித்துக்கொண்டு இருப்பது 2-வது துரோகம். முதல் துரோகம். 8 வழி பசுமைச்சாலை மூலம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது, போராடியவர்களை அடித்து தாக்கியது 3-வது துரோகம். மற்ற மாநிலங்களில் சாலை வழியாக குழாய்கள் பதிக்கும்போது விவசாய நிலங்களில் குழாய் பதித்து இழப்பு ஏற்படுத்தியது 4-வது துரோகம். 
பொள்ளாச்சியில் இளம்பெண்களை கடத்திய அ.தி.மு.க.வினரை காப்பாற்றியது 5-வது துரோகம். தண்ணீருக்கு கண்டம் பெற மீட்டர் பொருத்துவது 6-வது துரோகம். சிறுவாணி தண்ணீரை தனியாருக்கு விற்றது 7-வது துரோகம். 
அவினாசியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு கொடுக்காமல் பாலம் கட்டுவது 8-வது துரோகம். உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் கொடுத்து, மற்ற ஒப்பந்ததாரர்களின் தொழிலை  அழித்தது அல்லது அவர்களை கொத்தடிமைகளாக மாற்றியது 9-வது துரோகம். எடப்பாடியில் பழனிசாமி, கோபியில் செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் வேலுமணி, குமாரபாளையத்தில் தங்கமணி, பவானியில் கே.சி.கருப்பணன் என்று முக்கிய அமைச்சர்கள் இருந்தும் கொங்கு மண்டலத்துக்கு எதுவும் செய்யாமல் சுயநலத்துக்காக செயல்பட்டது 10-வது துரோகம். 
இந்த துரோகங்களுக்கு எல்லாம் இந்த தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்