கரூர் சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமானத்துறையினர் சோதனை

கரூர் சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமானத்துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2021-03-29 18:57 GMT
கரூர்
வருமானவரித்துறையினர் சோதனை
கரூர் காமராஜபுரம் மேற்கு சாலையில் வசித்து வருபவர் ராஜேஷ் கண்ணன். இவர் தரைத்தளத்தில் கரூர் கர்ட்டன்ஸ் என்ற பெயரில் வீட்டின் அலங்கார துணி வகைகளை (திரைச்சீலை) உள்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மாடியில் வசித்து வருகிறார். மேலும் இவர் கரூர் மாவட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 
இவருக்கு குப்பை தொட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் காமராஜபுரம் மேற்கு சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். 
ஆவணங்கள்
கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 8 பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் காலை 11 மணி முதல் மாலை 5.40 மணி வரை சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு ஆவணங்களின் நகல்களை வருமானவரித்துறையினர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்