வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ்கள்

தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Update: 2021-03-29 19:51 GMT
 பெரம்பலூர்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உரிய வாக்குச்சாவடியில் பதிவு செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) சார்பில் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து வருகிற 4, 5-ந்தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கபடவுள்ளன. மேலும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்