ஈரோட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் தங்க நாணயங்கள் பறிமுதல்

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-03-30 20:39 GMT
ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
30 பவுன் தங்க நாணயங்கள்
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உள்பட்ட வில்லரம்பட்டி நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த காரில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 பவுன் கொண்ட 6 தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் பவானியை சோ்ந்த சிங்காரவேலன் (வயது 46) என்பதும், அவர் பவானியில் நகைக்கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், ஈரோட்டை சேர்ந்த ராஜேந்தர் என்பவருக்கு 6 தங்க நாணயங்களை கொடுப்பதற்காக எடுத்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
பறிமுதல்
தங்க நாணயத்தை கொண்டு சென்றதற்கான உரிய ஆவணங்கள் சிங்காரவேலனிடம் இல்லை. இதனால் அவரிடம் இருந்து 30 பவுன் தங்க நாணயங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இதையடுத்து அந்த தங்க நாணயங்களை ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை காண்பித்தால், தங்க நாணயங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்