குடும்ப தகராறில் 2 வயது மகன் கண்ணெதிரே பயங்கரம்: மனைவியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற ரவுடி

வியாசர்பாடியில் குடும்பத் தகராறு காரணமாக 2 வயது மகன் கண்ணெதிரே மனைவியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-02 00:52 GMT
பெரம்பூர்,

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி (வயது 26). பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கும், புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகரைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் விஜயலட்சுமி (23) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ரவிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் விஜயலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் மீது கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து, ரவி தினமும் குடித்துவிட்டு, மாமனார் வீட்டிற்கு சென்று விஜயலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் விஜயலட்சுமி திருமண நிகழ்ச்சிக்கு வெளியே சென்றிருந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற ரவி, மாமனார் வெங்கடேசனை கல்லால் தாக்கி காயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

குத்திக்கொலை

பின்னர் மனைவி விஜயலட்சுமி மற்றும் தனது 2 வயது மகனையும் நேற்று முன்தினம் நள்ளிரவு வியாசர்பாடி அழைத்து வந்துள்ளார். அப்போது வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதை அருகே வந்தபோது, விஜயலட்சுமியிடம் தகராறு செய்த ரவி, அங்கிருந்த பீர்பாட்டிலால் அவரது கழுத்திலும் வயிற்றிலும் சரமாரியாக குத்தினார்.

இதைக்கண்டு அச்சத்தில் அலறிய குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே வியாசர்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரெயில்வே சுரங்கப்பாதையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விஜயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ரவியை தேடி வந்த நிலையில், நேற்று காலை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ரவி மீது புளியந்தோப்பு வியாசர்பாடி, ஓட்டேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. 2 வயது மகன் கண்ணெதிரே தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்